தோகைமலை, டிச.20: தோகைமலை அருகே வாலிபர் கிணற்றில் மூழ்கி பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தோகைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம், தோகைமலை காவல் சரகத்திற்கு உட்பட்ட கீரனூர் ஊராட்சி வெள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் ராஜ்குமார் (23). இவர் அதே பகுதியில் 12ம் வகுப்பு வரை படித்து விட்டு திருப்பூர் பகுதியில் தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலையை விட்டுவிட்டு சில மாதங்களுக்கு முன் வீட்டிற்கு வந்தவர் வேறு வேலையின்றி இருந்துள்ளார். நேற்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற ராஜ்குமார் மாலைவரை வீடு திரும்பவில்லை. இதனால் மகனைக் காணாததால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். பிறகு தனது தோட்டத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் சென்று பார்த்தபோது அங்கு கிணற்றின் அருகில் மகனின் செருப்பு மட்டும் இருந்ததைக்கண்டு அதிர்ச்சியில் சந்தேகமடைந்த உறவினர்கள் தோகைமலை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தோகைமலை போலீசார் மற்றும் முசிறி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கயிற்றின் உதவியுடன் சுமார் 95 அடி ஆழம் கொண்ட கிணற்றில் இறங்கி தண்ணீரில் பாதாளக் கரண்டி உதவியுடன் ராஜ்குமார் உடலைத் தேடிக் கண்டுபிடித்து மேலே எடுத்து வந்தனர். பின்னர் தோகைமலை போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து ராஜ்கமார் இறப்பு குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.