பழநி, டிச. 18: பழநி ரவுண்டானாவில் சேதப்படுத்தப்பட்ட வேல் சிலைக்கு பதிலாக புதிய சிலை வைக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோயில் நகரான பழநியில் வையாபுரி குளத்து ரோடு பைபாஸ் ரவுண்டானா உள்ளது. இப்பகுதியை புதுப்பித்து வேல் சிலை வைத்தனர். அப்போது முதல் வேல் ரவுண்டானா என அழைக்கப்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் ரவுண்டானாவில் இருந்த வேல் சிலையை வாலிபர் ஒருவர் கல்லால் தாக்கி சேதப்படுத்தினார். இதனைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் அவரைப் பிடித்து சரமாரியாக தாக்கினர். பிடிபட்டவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், போதை ஆசாமியை கைது செய்தனர். இந்நிலையில் புதிய வேல் ஒரே நாளில் தயார் செய்யப்பட்டு நேற்று அதிகாலை மீண்டும் ரவுண்டானாவில் வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் டிஎஸ்பி சத்தியராஜ், டவுன் இன்ஸ்பெக்டர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சேதப்படுத்த சிலை மீண்டும் வைக்கப்பட்டதால் பழநி நகர மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.