×

கோமாரி நோய் தடுப்பூசி குறித்து அண்ணாமலை உண்மை நிலை அறியாமல் பேசி வருகிறார்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை

சென்னை: மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட மறுப்பு அறிக்கை:  கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 90.30 லட்சம் தடுப்பூசி மருந்துகள் முழுவதுமாக ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு தகுதியுள்ள 87.03 லட்சம் மாட்டினங்களுக்கு முதல் சுற்று தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்பட்டது.  ஆறு மாதத்திற்கு ஒருமுறை தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட வேண்டிய நிலையில், கடந்த பிப்ரவரி 2020க்குப் பின்பு, ஒன்றிய அரசால் வழங்கப்பட வேண்டிய அடுத்த தவணையான செப்டம்பர் 2020, பிப்ரவரி 2021 மற்றும் செப்டம்பர் 2021 மாதங்களுக்கான தடுப்பூசி மருந்துகள் தமிழகத்திற்கு வழங்கப்படவில்லை.

கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு கோமாரி நோய்த் தொற்று ஏற்பட்டு விவசாயிகளின்  பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடாது  எனும் அடிப்படையில்,  கையிருப்பில் இருந்த கோமாரி நோய் தடுப்பு மருந்துகள் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள அனைத்து மாட்டினங்களுக்கும்,  கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களின் எல்லையோர தமிழக மாவட்டங்களான ஈரோடு, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், ஆகிய மாவட்டங்களின் எல்லையோர கிராமங்களில் உள்ள மாட்டினங்களையும் சேர்த்து சுமார் 2.69 லட்சம் தடுப்பூசிகள் செப்டம்பர் 2021ல் போடப்பட்டுள்ளது.  

ஒன்றிய அரசு கடந்த டிசம்பர் 7ம் தேதி 20.89 லட்சம் கோமாரி நோய் தடுப்பூசி மருந்துகள் வேலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து தேவைப்படும் இதர மாவட்டங்களின்  உடனடி தேவைக்கென தடுப்பூசி மருந்துகள் பிரித்து வழங்கப்பட்டு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சுற்று தடுப்பூசிப்பணிக்கு தமிழகத்திற்கு மேலும் 40.26 லட்சம் தடுப்பூசி மருந்துகள் ஒன்றிய அரசால் வழங்கப்பட வேண்டியுள்ளது. முதல்வர் ஆட்சி பொறுப்பேற்றபின் தமிழ்நாட்டில் உள்ள கால்நடைகளின் நலனை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோமாரி நோய் தடுப்பூசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஒன்றிய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் மீனவளத்துறை  இணை அமைச்சரின் டெல்லி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல நான் கேட்டுக்கொண்டேன். மேலும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் ஒன்றிய அரசின் தொடர்புடைய அமைச்சகத்தின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்றார். கால்நடை வளர்க்கும் ஏழை, எளிய விவசாய பெருமக்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் கூறப்பட்ட கருத்துக்களை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உண்மை நிலை அறியாமல் அரசியல் பேசி வருவது நகைப்பாக உள்ளது. இவ்வாறு உண்மைக்கு புறம்பாக பேசுவதை தவிர்த்து தமிழகத்திற்கு வரவேண்டிய தடுப்பு மருந்துகளை விடுபாடின்றி உரிய நேரத்தில் கிடைப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Annamalai ,Minister ,Anita Radhakrishnan ,
× RELATED அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி: செல்லூர் ராஜூ சாடல்