சென்னை: பட்டியலினத்தவர்களை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.சந்திரசேகர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சாம் அபிஷேக் மட்டும் ஆஜரானார். நடிகை மீரா மிதுன் ஆஜராகவில்லை. அப்போது போலீஸ் தரப்பில் காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர், ஜாமீன் வழங்கியபோது ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10.30 மணிக்கு விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையையும் மீரா மிதுன் நிறைவேற்றவில்லை என்றார்.
அப்போது நீதிபதி, நிபந்தனையை நிறைவேற்றவில்லை என்றால் ஜாமீனை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்யலாம் என்று போலீஸ் தரப்புக்கு அறிவுறுத்தினார். பின்னர் வழக்கு விசாரணையை ஜனவரி 11ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்று ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.