விருத்தாசலம், டிச. 18: விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பிரதோஷம், உற்சவம், மாசிமக திருவிழா, புத்தாண்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பண்டிகை நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் இருப்பது போல் இக்கோயிலில் உள்ள சிவனை வழிப்பட்டால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் தினமும் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர். அவ்வாறு தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற பக்தர்கள் அங்குள்ள உண்டியல்களில் காணிக்கையாக பணம், நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் செலுத்தி வருகின்றனர். அதன்படி கோயிலின் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் உள்ளிட்ட 10 இடங்களில் உண்டியல்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன் முன்னிலையில் அனைத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 9 லட்சத்து 52 ஆயிரத்து 836 பணம், 31 கிராம் தங்கம், 70 கிராம் வெள்ளி காணிக்கை இருந்தது. கோயில் செயல் அலுவலர் முத்து ராஜா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.