×

புதுகை நீதிமன்றத்தில் எஸ்எஸ்ஐ கொலை வழக்கு குற்றவாளிக்கு ஜாமீன் மறுப்பு


புதுக்கோட்டை, டிச. 17: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டி பகுதியில் திருச்சி நவல்பட்டு எஸ்எஸ்ஐ கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளி மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்க மறுத்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டி ரயில்வே தரைப்பாலம் அருகே திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரிந்த எஸ்எஸ்ஐ பூமிநாதன் கடந்த மாதம் 21ம் தேதி ஆடு திருடும் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டம் தோகூரை சேர்ந்த மணிகண்டன்(19) மற்றும் இரண்டு சிறுவர்களை கீரனூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் மணிகண்டனை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து கொலை நடந்த இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட மணிகண்டன் தற்போது சிறையில் உள்ளார். மீதமுள்ள இரண்டு சிறுவர்களும் திருச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் முதல் குற்றவாளியாக உள்ள மணிகண்டன் தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. விசாரணையின் போது இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதாலும், மணிகண்டனால் கொலை செய்யப்பட்டது காவல் உதவி ஆய்வாளர் என்பதாலும் விசாரணை நிலுவையில் உள்ளதாலும் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்ற மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் மனிகண்டனின் ஜாமீன் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.

Tags : SSI ,
× RELATED எஸ்எஸ்ஐயை தாக்க முயன்ற ரவுடி கைது