காஞ்சிபுரம்: அரசின் மக்கள் நலத் திட்டங்கள் உடனடியாக சென்று சேர நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் காஞ்சிபுரம் ஒன்றியக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து காஞ்சிபுரத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியக்குழு அலுவலகத்தில் முதல் ஒன்றியக் குழு கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றியக்குழு பெருந்தலைவர் மலர்க்கொடி குமார் தலைமை தாங்கினார். பிடிஓ சீனிவாசன் வரவேற்றார். துணைத் தலைவர் திவ்யப்பிரியா இளமது முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எழிலரசன் எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றதும் உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழிகாட்டியாக செயல்பட்ட அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு, எம்பி டி.ஆர்.பாலு, எம்எல்ஏக்கள் க.சுந்தர், வக்கீல் எழிலரசன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மக்களுக்கு தேவையான அனைத்து தேவைகளும் அறிந்து உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். மேலும் அரசு தரும் நலதிட்டங்களை உடனடியாக மக்களிடம் எடுத்து செல்ல ஒன்றிய கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகளுடன் இணைந்து வேகமாக பணியாற்ற வேண்டும். முதல் கட்டமாக சாலை, கால்வாய், குடிநீர் வசதிகள் தங்குதடையின்றி கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றுப்பட்டன. முடிவில் பிடிஓ வெங்கடேசன் நன்றி கூறினார். இதில், தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் சேகரன், காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், குமணன், நிர்வாகிகள் தசரதன், எஸ்கேபி.சீனிவாசன், கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.