×

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்கு சீர்வரிசை வழங்கிய ரங்கம் ரங்கநாதர்

திருச்சி, டிச.16: திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் எழுந்தருளியுள்ள தாயார் அகிலாண்டேஸ்வரி ரங்கம் ரங்கநாதரின் தங்கை உறவு முறை ஆவார். இவருக்கு வருடம் தோறும் தனுர் மாதம் மார்கழி முதல் தேதியன்று தங்கையான அகிலாண்டேஸ்வரிக்கு அண்ணனான ரங்கநாதர் சீர்வரிசை வழங்குவது ஐதீகம். அதன்படி நேற்று திருஅன்னப்பாவாடை நிகழ்ச்சிக்காக காய்கறி பொருட்கள், மளிகை பொருட்கள் மற்றும் மங்கலப் பொருட்களான மாலைகள், பழங்கள், திருமாங்கல்யம் ஆகியவற்றை சீர் வரிசையாக வழங்கப்பட்டது. முன்னதாக ரங்கம் ரெங்க விலாச மண்டபத்தில் சீர்வரிசை பொருட்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து ரங்கம் கோயில் உதவி ஆணையர் கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், ஹரிஷ் பட்டர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஊர்வலமாக மேளத்தாளத்துடன் கொண்டு சென்றனர். திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில், கோயில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் அர்ச்சகரிடம் சீர்வரிசை பொருட்களை வழங்கினர். இதில் சீர்வரிசை பொருட்களுக்கு திருவானைக்காவல் யானை அகிலா ஆசி வழங்கியது. இந்நிகழ்ச்சியில் கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Aurangzeb Ranganathar ,Thiruvanaikaval ,
× RELATED திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாலையில்...