கும்பகோணம், டிச.15: கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பகுதி திருச்சேறை சாரநாத பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. இதனையொட்டி சொர்க்கவாசல் வழியாக சாரநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கும்பகோணம் அருகே திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் கோயில் 108 வைணவ தலங்களில் 12வது தலமாகும். இக்கோயில் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமையானது. இத்தலத்தில் மட்டுமே சாரநாதப்பெருமாள் தேவி, பூமிதேவி, நீலாதேவி, மகாலட்சுமி மற்றும் சாரநாயகி என பஞ்சலட்சுமிகளுடன் அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு வலது பக்கம் மார்க்கண்டேயரும், இடதுபக்கம் காவிரித்தாயும் அமர்ந்துள்ளனர். தொடர்ந்து வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று சாரநாத பெருமாள் அழகிய பட்டாடை மற்றும் சிறப்பு அலங்காரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க, பட்டாச்சாரியார் பாசுரங்கள் பாட, பரமபத வாசலை கடந்து வந்தார். அவருடன் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பரமபத வாசலை கடந்து வந்தும், பிரகார உலா வந்த பெருமாளை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர். தொடர்ந்து கோயில் கொடிமரம் அருகே பெருமாள் எழுந்தருளி ஆழ்வார்களுக்கு காட்சியளித்தார். அப்போது பாசுரங்கள் வாசிக்கப்பட்டு ஒவ்வொரு ஆய்வாளராக வர அவர்களுக்கு மலர் மாலைகள் சாற்றி ஜடாரி மரியாதையும் வழங்கப்பட்டது.