விராலிமலை, டிச. 15: விராலிமலை அருகே விராலூர் பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோஷமிட்டு வழிபாடு நடத்தினர். விராலிமலை அருகே விராலூரில் சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்று புகழ் பெற்ற தேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை)காலை மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து காலை 10.30 மணியளவில் பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக சீனிவாச பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஒன்றிய குழு துணை தலைவர் லதா இளங்குமரன், திமுக ஒன்றிய செயலர் அய்யப்பன்(மத்தி), ஊராட்சி மன்ற தலைவர் போஸ், துணை தலைவர் நாகராஜ், ராமானுஜ கைங்கர்ய குழு பூபாலன், மாரியப்பன், சண்முகம், செல்வராசு, முருகேசன், காசிநாதன் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பட்டாச்சாரியார் மணிகண்டன், ரமணன், நாராயணன் செய்திருந்தனர்.