×

ஐடிஐயில் படிக்கும் போது காதல், கர்ப்பம் வீட்டின் மாடியில் இருந்து குதித்து கர்ப்பிணி மாணவி தற்கொலை முயற்சி

* தரையில் விழுந்த அதிர்வில் 8 மாத குழந்தை இறந்த நிலையில் ‘டெலிவரி’
* விசாரணை வளையத்தில் காதலன்

சென்னை: தொழிற்கல்வி (ஐடிஐ) படிக்கும்போது ஏற்பட்ட காதலனுடன் நெருக்கமாக இருந்ததால் நிறைமாத கர்ப்பிணியான ஐடிஐ மாணவி திடீரென வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் மேலிருந்து கீழே விழுந்த அதிர்வில் அவரது வயிற்றில் இருந்த 8 மாத ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. அவர் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கோடம்பாக்கம் பாளையக்காரன் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், சினிமாவில் லைட்மேனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு ராணி (21), (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகள் உள்ளார்.

அவர் கிண்டியில் உள்ள அரசு ஐடிஐயில் தொழில் கல்வி படித்து வருகிறார். இந்நிலையில் ராணிக்கு தன்னுடன் படிக்கும் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி, நெருக்கத்தில் முடிந்தது. இதனால் காதல் ஜோடி பல இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்துள்ளனர். இதனால், அவருக்கு தெரியாமலேயே ராணி கர்ப்பமாகி உள்ளார். வழக்கமாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் தலைசுற்றல், வாந்தி, பசியின்மை போன்றவை ஏற்பட்டுள்ளது. அப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தபோதுதான் ராணி கர்ப்பம் அடைந்திருந்தது தெரியவந்தது. மாணவி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மருத்துவர்கள் அவரின் பெற்றோருக்கு தெரிவித்தபோது, அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே காதலித்த பாக்கியராஜிக்கு திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால் பாக்கியராஜ் பெற்றோர் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்குள் ராணியின் வயிற்றில் சிசுவுக்கு 8 மாதம் ஆகிவிட்டது. நாள் நெருங்க நெருங்க குழந்தை பிறப்பதற்கு முன் திருமணம் செய்ய வேண்டும் என்ற மனஅழுத்ததில் பாக்கியராஜிடம் தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், பெற்றோரின் பேச்சை கேட்டு பாக்கியராஜ், ராணியுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராணி நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் வெகு நேரம் செல்போனில் அழுதபடி பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. திருமணத்துக்கு முன்னால் தான் குழந்தை பெற்றால் தன் குடும்பத்தினருக்கு அவமானப்பட வேண்டும் என்று கருதினார். இதனால், தற்கொலை செய்து கொள்ளும் முடிவு செய்து திடீரென அவர் தன் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்தார். 8 மாத கர்ப்பமாக இருந்த ராணி கீழே விழுந்ததில் அவரின் பனிக்குடம் உடைந்து, அவரது வயிற்றில் இருந்த ஆண் குழந்தை இறந்து அந்த ‘ஸ்பாட்டி’லேயே டெலிவரி ஆகிவிட்டது. இதில் வலி தாங்க முடியாமல் ராணி அலறினார்.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தாய் மற்றும் குழந்தையை மீட்டு கோடம்பாக்கத்தில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாடியில் இருந்து கீழே விழுந்த அதிர்ச்சி தாங்க முடியாத வயிற்றில் இருந்த 8 மாத குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், ராணிக்கு ரத்த போக்கு அதிகமாக இருந்ததாலும், அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாலும் மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ராணி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் குறித்து வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து 8 மாத நிறைமாத கர்ப்பிணியான மாணவி தற்கொலை முயற்சிக்கு காரணம் என்ன, காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் தற்கொலை முடிவுக்கு சென்றாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 8 மாத நிறைமாத கர்ப்பிணி ஒருவர் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் கோடம்பாக்கம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 8 மாத கர்ப்பமாக இருந்த ராணி கீழே விழுந்ததில் அவரின் பனிக்குடம் உடைந்து, அவரது வயிற்றில் இருந்த ஆண் குழந்தை இறந்தது.

Tags : ITI ,
× RELATED மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த...