×

ஒடுகத்தூரில் எஸ்ஐக்கள் தலைமையில் அதிரடி: சாராய கடத்தல் தடுக்க திடீர் வாகன சோதனை

ஒடுகத்தூர், டிச.14: ஒடுகத்தூர் பகுதியில் கள்ளச் சாராய கடத்தலை தடுக்க எஸ்ஐக்கள் தலைமையிலான போலீசார் நேற்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளது. இப்பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்வதும், அதனை மற்ற பகுதிகளுக்கு பைக் மூலம் கடத்தி செல்வதாக புகார்கள் எழுந்துள்ளது.

அதனை தடுக்கும் வகையில் போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி ஒடுகத்தூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி எதிரே வேப்பங்குப்பம் எஸ்.ஐக்கள் மேகநாதன், வெற்றிவேல் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, முகக்கவசம் மற்றும் லைசன்ஸ் இல்லாமல் சென்ற 50 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ஒடுகத்தூர் சுற்றியுள்ள மலை பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகார்களின் பேரில் இந்த வாகன சோதனை நடத்தப்பட்டது. தற்போது, முகக்கவசம் அணியாமலும், ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் வரும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனை தொடரும்’ என்றனர்.

Tags : SIs ,Odugathur ,
× RELATED ஒடுகத்தூர் அருகே பைக்கில் சாராயம் கடத்திய வாலிபர் கைது