புதுச்சேரி, டிச. 14: புதுச்சேரியில் துணிச்சலாக ரோட்டில் நடந்ேத வந்து மூதாட்டியிடம் 2 ஆசாமிகள் நகை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி, நெல்லித்தோப்பு, புவன்கரே வீதியைச் சேர்ந்தவர் கேத்ரின் (60). தனது வீட்டின் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பின்புறமாக திடீரென வந்த 2 பேர் கேத்ரின் கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிஓடி விட்டனர்.
இதுகுறித்து அவர் உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை அடையாளம் காண சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 மர்ம நபர்கள் எந்த வாகனங்களிலும் இல்லாமல் துணிச்சலாக நடந்து வந்தே மூதாட்டியிடம் நகையை பறித்துவிட்டு தப்பி ஓடும் காட்சி பதிவாகி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து 2 பேரையும் அடையாளம் கண்ட உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார், ஒரு தனிப்படையை தமிழக பகுதிக்கு அனுப்பி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த 2 பேரும் பஸ்சிலேயே தமிழக பகுதியில் இருந்து புதுச்சேரி வந்து பெண்களிடம் நகைகளை பறித்துவிட்டு மீண்டும் பஸ்சில் ஏறி தமிழகத்துக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.