ஈரோடு,டிச.13: ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் தேர்த்திருவிழா நேற்று கொரோனா பரவல் காரணமாக எளிமையாக நடந்தது. ஈரோடு ஸ்டேட் பேங்க் ரோட்டில் புனித அமல அன்னை தேவலாயத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் தேர்த்திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி, நடப்பாண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து 8ம் தேதி முதல் திருப்பலிகள், வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று தேர்த்திருவிழாவுக்கான திருப்பலிகள் நடந்தது.
திருப்பலி முடிந்ததும், ஈரோடு மறைவட்ட முதன்மை குருவும், புனித அமல அன்னை ஆலய பங்கு தந்தையுமான ஜான்சேவியர் தலைமையில் வேண்டுதல் தேர் எடுக்கப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தேர் முக்கிய வீதி வழியாக செல்லாமல், ஆலயத்திற்குள், ஆலயத்தை சுற்றி மட்டுமே வேண்டுதல் தேர் எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ராயப்பதாஸ், பிரதீப் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனா்.