நாகர்கோவில், டிச.13: இரணியல் பாலம் அருகே உள்ள செல்வராஜ கணபதி கோயிலை அகற்ற வேண்டும் என்று பொதுப்பணித்துறை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இதற்கு பிரின்ஸ் எம்.எல்.ஏ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இரணியல் வள்ளியாறு பாலம் அருகே செல்வராஜ கணபதி கோயில் உள்ளது. 21 நாட்களுக்குள் இந்த கோயில் ஆக்ரமிப்பை அகற்ற வேண்டும். தவறினால் தக்கலை நீர் பாசன சிறப்பு பிரிவு உதவி பொறியாளர் ஆக்ரமிப்பை அகற்றிவிட்டு, அதற்கான செலவு தொகையை தங்கள் மீது விதிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை உதவி பொறியாளரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் 30ம் தேதி இது தொடர்பான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பான காலக்கெடு முடிந்துள்ளது.
இருப்பினும் கோயில் அகற்றப்படாத நிலையில் கோயிலை அகற்ற பொதுப்பணித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பக்தர்கள் பிரின்ஸ் எம்.எல்.ஏ கவனத்திற்கு கொண்டு சென்றனர். அவர் செல்வராஜ கணபதி கோயிலை நேரடியாக வந்து பார்வையிட்டார். மேலும் அவர் அளித்த தகவலின் பேரில் பத்மநாபபுரம் சப்.கலெக்டர் அலர்மேல் மங்கை மற்றும் கல்குளம் தாசில்தார் உள்ளிட்டோரும் நேரில் வந்து பார்வையிட்டனர். கோயில் அமைந்திருக்கும் பகுதி தண்ணீர் போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ எந்த இடையூறும் இல்லாத வகையில் அமைந்துள்ளது. தடுப்பணை அருகே தான் கோயிலும் அமைந்துள்ளது.
பல 100 வருடங்களாக இங்கு பூஜைகள் நடைபெறுகிறது, அனைத்து சாதி சமூகத்தவர்களும் ஒருமைப்பாட்டுடன் நடக்கிறார்கள். எனவே இந்த கோயிலை எக்காரணம் கொண்டும் இடிக்க வேண்டாம் என வலியுறுத்தினார். இது தொடர்பாக பிரின்ஸ் எம்.எல்.ஏ கூறுகையில், ‘சப் கலெக்டர், தாசில்தார், விஏஒ என்று எல்லா அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தோம். அவர்கள் வந்தார்கள். கோயில் கரை பகுதிக்கு அரண்போன்று உள்ளது. அருகே தடுப்பணையும் உள்ளது. இதனால் நீர்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சப் கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் நேரில் விளக்கினோம். கோயிலை இடிக்க வேண்டாம் என்று தெரிவித்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக சப் கலெக்டர் உறுதியளித்தார்’ என்றார்.