திருவில்லிபுத்தூர், டிச. 11: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படை ராணுவத் தளபதி பிபின் ராவத் உருவப் படத்திற்கு அரசுப்பள்ளி சிறுவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி, வீர வணக்கம் செய்தனர். திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் மறைந்த முப்படை ராணுவத் தளபதி பிபின் ராவத்திற்கு அஞ்சலி செலுத்தவதற்காக கருப்புப் பட்டை அணிந்து பள்ளிக்கு வந்திருந்தனர். பின்னர் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ், முப்படை தளபதி பிபின் ராவத்தின் சாதனைகள் குறித்து பேசினார். பின்னர் அனைவரும் பிபின் ராவத்தின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவி ஆனந்த ஜோதி, துணைத் தலைவி வீரலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரேஸ்வரி பிஎட் கல்லூரியில் செயலர் திலீபன் ராஜா, நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர். திருவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமாள் தேவன்பட்டி பகுதியில் ஊர் நிர்வாகிகள் சாவடி முன்பு கூடி பிபின் ராவத் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர். இதில் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.