திருப்பூர், நவ. 11: திருப்பூர் ஆண்டிபாளையம் பிரிவு பகுதியில் போக்குவரத்து சிக்னல் இல்லாததால் வாகன ஒட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். திருப்பூர் மாநகர பகுதியில் ஏரளாமான பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்ற வெளி மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர் வந்து தங்கி பணியாற்றி வருகின்றனர். தொழிலாளர்களின் வருகைக்கேற்ப வாகன பெருக்கமும் அதிகரித்துள்ளது. வாகன பெருக்கத்திற்கேற்றவாறு சாலை வசதிகள் இன்னும் விரிவுபடுத்தப்படாமல் உள்ளது.
திருப்பூர்- மங்கலம் பிரதான சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் சென்று வருகிறது. இதனிடையே உள்ள ஆண்டிபாளையம் பிரிவு பகுதியில் போக்குவரத்து சிக்னல் இல்லாமல் உள்ளது. இதனால் காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி அங்கு போக்குவரத்து சிக்னல் அமைக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.