விக்கிரவாண்டி டோல்கேட்டில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

விக்கிரவாண்டி, டிச. 11: விக்கிரவாண்டி டோல்கேட்டை கடக்க முயன்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 5பேர்  அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.பெரம்பலூர் மாவட்டம் கொளப்பட்டியை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன் (41). இவர் நேற்று முன்தினம் வெளிநாட்டிற்கு சென்ற தனது உறவினரை சென்னை ஏர்போர்ட்டிற்கு சென்று வழி அனுப்பிவிட்டு நேற்று காலை ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். காலை 11.30 மணியளவில் விக்கிரவாண்டி டோல்கேட்டை கார் கடக்க முயன்ற போது என்ஜின் முன்புறம் திடீரென புகைவந்தது. இது குறித்து டோல்பிளாசா ஊழியர்கள் எச்சரித்தவுடன் கொளஞ்சியப்பன் காரை உடனடியாக நிறுத்தினார்.

அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் என்ஜின் திடீரென தீப்பிடித்து எரிந்ததால், காரில் வந்த கொளஞ்சியப்பனின் தாய், தங்கை, அவரது கணவர், மகள் ஆகியோரை கீழே பத்திரமாக இறக்கினார். தகவலறிந்த விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் ராஜவேலு, வேல் முருகன், டோல் பிளாசா பி.ஆர்.ஓ., சொர்ணமணி, பாதுகாப்பு மேலாளர் அசோக்குமார் கொண்ட குழுவினர் உடனடியாக செயல்பட்டு தீ மேலும் பரவாத வகையில் தண்ணீர் பீச்சியடித்து தீயை அணைத்தனர். பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக காரின் முன்புறம் தீப்பற்றி எரிந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

Related Stories:

கடலில் கொட்டப்படும் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு புதுச்சேரி, மே 22: கடலில் கொட்டப்படும் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கவர்னர் தமிழிசை வேதனையுடன் தெரிவித்தார். ஜி20 தலைமை பொறுப்பில் இருக்கும் இந்தியா உள்ளிட்ட ஜி20 நாடுகளில் நேற்று கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. நீடித்த, நிலையான கடல்சார் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் கடல்சார் மேலாண்மை மற்றும் பல்லுயிர் பாதுகாப்புக்கான தீர்வுகளை கண்டறியவும், இதுதொடர்பாக ஜி20 நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அனைத்து கடல்சார் மாநிலங்களிலும் கடற்கரைத் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல்துறை மற்றும் புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் சார்பில் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்து பேசியதாவது:நிலத்திலிருந்து கழிவுகளை அப்புறப்படுத்த கடலில் கொட்டுவது வழக்கமாக இருந்தது. ஆனால், தற்போது கடலில் கொட்டப்படும் கழிவுகள் மீன்களின் உணவுக்காக மாறி பின்பு நாமே மீன்களை உண்கிறோம் என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதேபோல, கடலில் கொட்டப்படும் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களும் அழிந்து வருகின்றன. தூய்மை இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே சுகாதார கேட்டினால் ஏற்படும் நோய்களை தடுத்ததன் மூலம் கிட்டத்தட்ட ரூ.60 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தப்பட்டது. புதுச்சேரி கடற்கரை சார்ந்த மாநிலம். எனவே, புதுச்சேரியில் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டத்தை நிச்சயமாக கொண்டு வர வேண்டும். கடலை சுத்தப்படுத்துவதன் மூலமாக நமது குடலும் சுத்தப்படுத்தப்படுகிறது. நிச்சயமாக இது இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, கவர்னர் உறுதிமொழி வாசிக்க, அதனை அனைவரும் ஏற்றனர். தொடர்ந்து, தேசிய மாணவர் படை மற்றும் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு நடைபயணம் மற்றும் பேரணியை கவர்னர் தொடங்கி வைத்தார். மேலும், சுற்றுச்சூழல் குறித்த பேச்சு, கட்டுரை, ஓவியம், வண்ணம் தீட்டுதல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார். சபாநாயகர் செல்வம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் முத்தம்மா, இயக்குநர் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.