கூடலூர், டிச.9: நீலகிரி மாவட்ட தமிழ் சங்கம் சார்பில் கடந்த 20 ஆண்டுகளாக பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, 2021ம் ஆண்டு பொங்கல் விழாவிற்கான இலக்கிய போட்டிகள் கூடலூர் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கூடலூர் கல்வி மாவட்ட அளவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியம், கட்டுரை, பேச்சு, கவிதை எழுதுதல் மற்றும் நடன போட்டிகள் நடத்தப்பட்டன. கூடலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரகாஷ் இளங்கோவன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தமிழ்ச் சங்க தலைவர் கவிஞர் மணிவண்ணன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் கணேசன், மணிகண்டன், கலைச்செல்வன், ஆதவன், காந்த், வரதராஜ், மணிவாசகம், செல்வநாயகம், மதியழகன் நிலேஷ், ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.