×

கல்வி துறைக்கு முதல்வர் கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளார் அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

காரைக்குடி, டிச.9: முதல்வர் பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி பவளவிழா ஆண்டு துவக்க விழா நடந்தது. ஒருங்கிணைப்பாளர் துரை தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் விழாவை துவக்கி வைத்து பேசுகையில், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இந்த கல்லூரி பல லட்சம் மாணவர்களை உருவாக்கி உள்ளது. இந்த விதையை விதைத்தவர் அழக்கப்பர். கல்விக்கு பெயர்போன நகரமாக மாற அழகப்பர் தான் காரணம்.

4 வகுப்பறைகளுடன் துவங்கப்பட்ட இக்கல்லூரி இன்று வளர்ச்சியடைந்துள்ளது. இக்கல்லூரியில் பணியாற்றும் அனைவரின் பங்களிப்பால் தேசிய அளவில் 75வது இடத்தை பெற்றுள்ளது பாராட்டுக்கு உரியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு சொன்னதையும், சொல்லாததையும் நிறைவேற்றி வருகிறார். கல்விக்கு என பட்ஜெட்டில் 32 ஆயிரம் கோடி ஒதுக்கி பல்வேறு திட்டங்கள் செயல் படுப்படுகிறது என்றார். முன்னாள் அமைச்சர் தென்னவன் பேசுகையில், கல்விக்கு என பலகொடைகளை வழங்கி 20ம் நூற்றாண்டில் நம் கண்முன் வாழ்ந்து மறைந்தவர் வள்ளல் அழகப்பர். அவர் தந்த கொடை தான் இந்த கல்லூரி. இன்று பலர்கல்வி பயில அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளது என்றார். நிகழ்ச்சியில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி, அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா, எம்எல்ஏகள் மாங்குடி, தமிழரசி, மாவட்ட கவுன்சிலர் ராதா பாலசுப்பிரமணியன், ஊராட்சி தலைவர் வைரமுத்து அன்பரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,Minister ,Periyakaruppan ,
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...