காரைக்குடி, டிச.9: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஆற்றல் அறிவியல் துறைத்தலைவரும், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர், துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினருமான கருப்புச்சாமி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடியிடம் வேதியியல் துறையில் டாக்டர் பட்டத்தை பெற்றுள்ளார். டாக்டர்பட்ட ஆய்வில் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்துதல் மற்றும் ஹைட்ரஜன் வாயுவை தண்ணீரில் இருந்து பிரிப்பதற்கான ஆராய்ச்சி வழிமுறைகளை ஒளி வினையூக்கி கொண்டு விளக்கியுள்ளார். எளிய முறையில் தொழிற்சாலை கழிவுகளை சுத்திகரித்தல் மற்றும் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் வாயுவை எளிய முறையில் பிரித்தெடுப்பதற்கு பயன்படும் வகையில் இவரது டாக்டர் பட்ட ஆய்வு உள்ளது. பேராசிரியர் கருப்புச்சாமியை உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், துணைவேந்தர் பொறுப்புக்குழு தலைவர் கார்த்திகேயன் மற்றும் துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் டாக்டர் சுவாமிநாதன், பதிவாளர் சேகர் உள்பட பல்கலைக்கழக பணியாளர்கள் வாழ்த்தினர்.