மார்த்தாண்டம், டிச. 9:கன்னியாகுமரி திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இந்த சாலை மிகவும் மோசமாக சேதமடைந்து உள்ளதால், விமான நிலையம், மருத்துவமனைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தொடர் மழையால் சாலை மேலும் சேதமாகியுள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கடந்த 6ம் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அன்றைய தினம் பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால், மறியல் போராட்டத்தை காங்கிரசார் மாற்றி வைத்தனர். அதன்படி நேற்று காலை மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் சிஎஸ்ஐ சர்ச் முன்பு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பர்ட் தலைமையில் காங்கிரசார் குவிந்தனர். பின்னர் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் மறியலில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றனர்.
அப்போது தக்கலை டிஎஸ்பி கணேசன், மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், காங்கிரசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் பேரிகார்டு அமைத்து தடுப்பு ஏற்படுத்தினர். அதனை தொடர்ந்து காங்கிரசார் மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் குழித்துறை நகர தலைவர் அருள்ராஜ், துணை தலைவர் பால்மணி, மாநில பொதுச்செயலாளர் பால்ராஜ், வட்டார தலைவர்கள் எபனேசர், சதீஷ், ராஜூவ் காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் தலைவர் அஜிகுமார், நிர்வாகிகள் பாலு, ஜோதீஷ்குமார், ராசிக், உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 52 பேரை போலீசார் கைது செய்தனர்.