×

என்எல்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் வாபஸ்

விருத்தாசலம், டிச. 7: விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட வடக்குவெள்ளூர் ஊராட்சியில் குடிநீர், சாலை, நீர்நிலைகள் தூர்வாரி தருவதாக என்.எல்.சி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் என்எல்‌சி நிர்வாகம் எவ்வித அடிப்படை வசதியும் செய்து தராததால் ஆத்திரமடைந்த வடக்குவெள்ளூர், வெளிக்கூனங்குறிச்சி கிராம மக்கள் வருகின்ற 12ம் தேதி நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் இரண்டாம் சுரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். இதையடுத்து விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 4ம் தேதி சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டம் சுமூகமாக முடியாததால் 6ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
 இந்த நிலையில் நேற்று கோட்டாட்சியர் ராம்குமார் தலைமையில் வட்டாட்சியர் சிவகுமார் முன்னிலையில் இருதரப்பு சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

இதில் என்எல்சி அதிகாரிகள் சிவகுமார், கணேசன் உள்ளிட்டோரும் வடக்குவெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி, ஊராட்சி செயலாளர் மணிகண்டன், மாவட்ட கவுன்சிலர் ரகுராமன் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையின் நிறைவாக என்எல்சி நிர்வாகம் சார்பில் வடக்கு வெள்ளூர் ஊராட்சியில் உடனடியாக குடிநீர் வசதி மற்றும் கான்கிரீட் கழிவுநீர் கால்வாய்கள் டிசம்பர் 2022க்குள் அமைத்து தரப்படும்.  வடக்குவெள்ளூர் அரசு பள்ளியில் கழிவறை மற்றும் தண்ணீர் வசதியும் மைதானம், மதில் சுவர், தெற்குவெள்ளூர், வேப்பங்குறிச்சி அங்கன்வாடி ஜூன் 2022க்குள் சீரமைத்து மதில் சுவர் அமைத்து தருவதாகவும் மற்ற கோரிக்கைகளையும் உரிய காலத்திற்குள் நிறைவேற்றி தருவதாக என்.எல்.சி அதிகாரிகள் கூறியதையடுத்து இருதரப்பு சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் சுமூகமாக நிறைவுற்றது. இதனால் போராட்டம் வாபஸ் பெற்றப்பட்டது.

Tags : NLC ,
× RELATED விபத்தில் என்எல்சி தனி அலுவலர் இறப்பு;...