நெய்வேலி, டிச. 6:நெய்வேலி ஆர்ச் கேட் அருகே நெய்வேலி காவல் ஆய்வாளர் சாகுல் அமீது தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் பைக்கில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில் அவர் நெய்வேலி அருகே ஆத்திரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் சுந்தரபாண்டியன்(27) என்பதும், அவர் ஓட்டி வந்த பைக் திருட்டு வாகனம் என்பதும் தெரியவந்தது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 5 மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது. மேலும், சுந்தரபாண்டியன் மீது நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையத்தில் இரண்டு திருட்டு வழக்குகள் உள்ளது. அந்த வழக்கில் பிடிவாரண்ட் ஐந்து வருடமாக உள்ளது. சுந்தரபாண்டியன் அவ்வப்போது கடலூர் மாவட்டம், விழுப்புரம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை ஆய்வாளர் சாகுல்ஹமீது, உதவி ஆய்வாளர் தங்கவேல் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்தனர்.