×

வந்தவாசி அருகே மீன்பிடிக்க சென்ற கண்டுபிடித்து தரக்கோரி மலைவாழ் மக்கள் சாலை மறியல்

*விறகு வெட்டும் தொழிலாளி மின்வேலியில் சிக்கி பலி?

வந்தவாசி, டிச.5: வந்தவாசி அருகே மீன்பிடிக்க சென்ற விறகு வெட்டும் தொழிலாளி மின்வேலியில் சிக்கி பலியானார். சடலத்தை கண்டுபிடித்து தரக்கோரி மலைவாழ் மக்கள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன்(40), விறகு வெட்டும் தொழிலாளி. இவரது உறவினர் சின்ராஜ் (25) என்பவருடன் நேற்று முன்தினம் இரவு மீன் பிடிப்பதற்கு அருகே உள்ள முளைபட்டு கிராமத்தில் உள்ள ஏரி பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது,ஏரிக்கரை ஓரம் காட்டு பன்றியை பிடிக்க சிலர் மின்வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இதில், கன்னியப்பன் மின்வேலியில் சிக்கியதாக கூறப்படுகிறது. உடன் சென்ற சின்ராஜ் உடனே கிராமத்திற்குச் சென்று சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது கன்னியப்பன் சடலம் அங்கு இல்லையாம். ஆனால், கன்னியப்பன் எடுத்துச்சென்ற மீன்பிடி தூண்டில், டவல், தலையில் மாட்டும் லைட் உள்ளிட்ட பொருட்கள் அங்கு இருந்துள்ளது. வெகுநேரம் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து தேசூர் போலீசில் தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கோமளவல்லி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கன்னியப்பன் சடலத்தை தேடினர். மின்வேலி அமைத்ததாக கூறப்படும் விவசாயி தலைமறைவாக உள்ளதால் போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் சரவணன், சிபிஎம் வட்டார செயலாளர் அப்துல் காதர் உள்ளிட்ட நிர்வாகிகள் உறவினர்களுடன் கன்னியப்பன் உடலை கண்டுபிடித்து தரவேண்டும், மின் வேலி அமைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனககோரி தேசூர் காவல் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத தேசூர் போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் தேசூர்-வந்தவாசிக்கு இடையே 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. வந்தவாசி அடுத்த தேசூர் காவல் நிலையம் அருகே தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் விறகு வெட்டும் தொழிலாளியின் சடலத்தை கண்டுபிடித்து தரக்கோரி நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

விளைநிலங்களில் கிரிக்கெட் விளையாடி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் வந்தவாசியில் நடந்தது நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி

வந்தவாசி, டிச.5: வந்தவாசியில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி விளைநிலங்களில் கிரிக்கெட் விளையாடி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம் செய்தனர். கடந்த வாரம் தொடர் மழைகாரணமாக வந்தவாசி பகுதியில் பெரும்பாலான கிராமங்களில் நெற்பயிர்கள் மூழ்கி வீணானது. இதுகுறித்து வேளாண்மை துறை அலுவலர்கள் கணக்கு எடுக்க வாரமலும், எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாதததை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று வந்தவாசி அடுத்த கடைசிகுளம் கிராமத்தில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் பேட்டிங் செய்வது போலவும், விவசாயிகள் பீல்டிங் செய்வது போலவும், விவசாயிகள் கிரிக்கெட் போட்டி நடத்தி நூதன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது அழுகிய நெற்கதிர்களை பந்துகளாக செய்து வேளாண்மை துறை அதிகாரிகளிடம் மனு வழங்குவது போல் கூறி விவசாயிகள் பந்து வீசினர். வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகள் கொண்டு வந்த மனுக்களை திருப்பி அனுப்புவது போல் பந்துகளை சிக்சர் அடித்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வாக்கடை புருஷோத்தம், ரிஸ்வான், சேகர், மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Tarakori hill ,Vandavasi ,
× RELATED அரசு பஸ் கவிழ்ந்து 18 பயணிகள் படுகாயம்; வந்தவாசி அருகே பரபரப்பு