பெரணமல்லூர், டிச.5: பெரணமல்லூர் அருகே செய்யாற்றில் அடித்துச் செல்லப்பட்ட சமயலரை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பெரணமல்லூர் பகுதியில் கெங்காபுரம், கொழப்பலூர், ஆவணியாபுரம் வழியே செய்யாற்றுப்படுகை செல்கிறது. இந்த ஆற்றுப்படுகையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பருவ மழையினால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது. இதில் விநாயகபுரம் மற்றும் கொழப்பலூர் பகுதியை செய்யாற்றுபடுகை இணைக்கிறது. இந்த படுகையை கடந்து தான் கொழப்பலூர் பகுதிக்கு செல்லும் நிலையில் உள்ளார்கள். இந்நிலையில் நேற்று மாலை விநாயகபுரம் பகுதியை சேர்ந்த சமையலர் பழனி(65) என்பவர் கொழப்பலூர் பகுதிக்குச் சென்று மீண்டும் ஊருக்கு திரும்பினார்.
அப்போது ஆற்றுப்படுகையில் கடக்கும்போது ஆற்றுச் சுழலில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை மீட்க முடியாமல் கூச்சலிட்டனர்.இதனைத் தொடர்ந்து, மாலை 5 மணிக்குமேல் பெரணமல்லூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதையடுத்து சிறப்பு நிலைய அலுவலர் ஜோதி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஆற்றுப்படுகைக்கு விரைந்து சென்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளியை இரவு 7 மணி வரை தேடிப் பார்த்தனர். இரவு நேரத்தில் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டதால் இன்று மீண்டும் தேடும் பணியை ெதாடருவதாக தீயணைப்புத்துறையினர் கூறிவிட்டு சென்றனர். ஆற்று வெள்ளத்தில் சமையலர் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதால் அந்த பகுதியில் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது.