×

கந்தர்வகோட்டை கடைவீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக கிடந்த மண் குவியல் அகற்றம்

கந்தர்வகோட்டை, டிச.5: கந்தர்வகோட்டை கடைவீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக கிடந்த மண் குவியல்கள் அகற்றப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக மழைநீரில் அடித்து வரப்பட்ட மண் சாலையோரங்களில் ஆங்காங்கே குவிந்து கிடந்தது. இது தார்சாலையை சேதப்படுத்தியது மட்டுமின்றி வாகன போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்தது. டூவீலரில் செல்வோர் சுழன்று விழும் அளவிற்கு ஆங்காங்கே மண் குவியல் நிறைந்து கிடந்தது. வாகன ஓட்டிகளை பதம்பார்க்கும் வகையில் இருந்த இந்த மண்ணை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து சாலையோரங்களில் குவிந்து கிடந்த மண் குவியலை நெடுஞ்சாலை துறையினர் துப்புரவு பணி ஆட்களை கொண்டு அப்புறப்படுத்தினார்.

கந்தர்வகோட்டையில் காலைநேரத்தில் புதுக்கோட்டை, தஞ்சைக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும்

கந்தர்வகோட்டை, டிச.5: கந்தர்வகோட்டையில் இருந்து காலையில் புதுக்கோட்டை, தஞ்சை செல்வதற்கு பேருந்து விட வேண்டும் என்று மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் தஞ்சை மற்றும் புதுக்கோட்டையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். பெரும்பாலான மாணவ, மாணவிகள் தினமும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் சென்று வருகின்றனர்.

காலை வேளையில் தஞ்சையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் பேருந்தும், இதேபோல் புதுக்கோட்டையில் இருந்து தஞ்சை செல்லும் பேருந்தும் புறப்படும் இடங்களிலேயே பயணிகள் நிறைந்து விடுவதால் கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பேருந்துகளில் இடமில்லாமல் நின்று கொண்டு பயணிக்க வேண்டியுள்ளது.

சில நேரங்களில் நீண்டநேரமாக காத்திருந்தும் ஒரு சில பேருந்துகள் நிற்காமல் சென்று விடுகின்றன. இதனால் மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் அரசு போக்குவரத்து பணிமனை உள்ளது. ஆகையால் கந்தர்வகோட்டை போக்குவரத்து பணிமனையில் இருந்து காலை 8.30 மணி அளவில் கந்தர்வகோட்டையில் இருந்து தஞ்சை வழித்தடத்திலும், புதுகை வழித்தடத்திலும் மாணவர்கள் நலன் கருதி பேருந்துகளை இயக்க வேண்டும் என கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சம்மந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kandarwakottai ,mall ,
× RELATED சென்னை திருமங்கலத்தில் உள்ள...