×

கோவையில் தொடரும் கனமழை தயார் நிலையில் 5 ஜேசிபி வாகனங்கள், மோட்டார் பம்புகள்

கோவை, டிச.5: கோவையில் தொடரும் கனமழை காரணமாக அதன் பாதிப்புகளை சீர் செய்ய மாநகராட்சி சார்பாக 5 ஜேசிபி வாகனங்கள், சக்தி வாய்ந்த மோட்டார் பம்புகள், சூப்பர் சக்கர் வாகனம் போன்றவைகள் தயார் நிலையில் உள்ளன என மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநகராட்சிக்குட்பட்ட 9 குளங்கள் நிரம்பியுள்ளன. மேலும் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மாநகராட்சிக்குட்பட்ட வீதிகள் பலவற்றிலும் குறிப்பாக ராஜவாய்க்கல் செல்லும் வீதிகளில் மழை பெய்தால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன.

மேலும் அவினாசி மேம்பாலம், லங்கா கார்ணர், கிக்காணி ரயில்வே பாலம் என பல இடங்களிலும் மழை நீர் சூழ்ந்து விடுகின்றன. இதுதவிர சாலைகளில் மரம் விழுதல், சாலை சேதமடைதல் போன்றவைகளும் நடக்கின்றன. எனவே தொடரும் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை சீர் செய்ய தயார் நிலையில் 5 ஜேசிபி வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவை மாநகராட்சியில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இதில் பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு ஜேசிபி வாகனம் என 5 வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர சூப்பர் சக்கர் வாகனம், சக்தி வாய்ந்த மோட்டார் பம்புகள் போன்றவைகளும் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : JCB ,Coimbatore ,
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...