×

ராஜேந்திர சோழன் காலத்தில் நாட்டிற்காக உயிர்நீத்த வணிக குழுவினர்

பொன்னமராவதி, டிச. 4: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னையூர் கொன்னைக்கண்மாயில் தமிழகத்தில் முதன்முறையாக ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழர்களின் காலத்தைய வணிகக்குழுவினரின் 10 நினைவுத்தூண் கல்வெட்டுகள் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தலைவர் மேலப்பனையூர் கரு.ராஜேந்திரன், நிறுவனர் மங்கனூர் மணிகண்டன் தலைமையிலான புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக உறுப்பினர்கள் பீர் முகமது, கஸ்தூரி ரங்கன், கமலம் ஆகியோரடங்கிய குழுவினரால் ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கல்வெட்டுகள் குறித்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் மங்கனூர் மணிகண்டன் கூறியதாவது: சமூகத்தின் உயர்நிலையில் இருந்தவர்களுக்கும், போர், வேட்டையாடுதல், பயிர்களை காக்கும் பொருட்டு விலங்குகளை துரத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் மக்களை காக்கும் பொருட்டு உயிர்நீத்த வீரர்களுக்கும் நடுகல், வீரக்கல், நினைவுத்தூண் நடும் பழக்கம் இருந்துள்ளது. நினைவுத்தூண் கல்வெட்டுகள் புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பனையூர், வாழக்குறிச்சி, நெருஞ்சிக்குடி, செவலூர் ஆகிய ஊர்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொன்னைபட்டியில் உள்ள கண்மாயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நினைவுத்தூண்களில் ஒன்பது கல்வெட்டுகள் மட்டுமே நன்றாக வாசிக்கும் நிலையில் உள்ளன. இவை 5 முதல் 7 அடி உயரமும், சதுர வடிவிலும் மேற்பகுதி எண்பட்டை வடிவத்துடன் உள்ளன. இவற்றில் கல்வெட்டு பொறிப்பு ஒன்று முதல் இரண்டு தொடர் பக்கங்களில் 30 செ.மீ அகலம் முதல் 70 செ.மீ வரையிலான நீளத்துடன் ஒவ்வொரு கல்வெட்டிலும் அளவு மாறுபட்டு காணப்படுகிறது. தமிழகத்தில் ஒரே இடத்தில் 10 நினைவுத்தூண் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.. கொன்னையூர் நினைவுத்தூண் கல்வெட்டுகள் வணிகக்குழுவில் இருந்தோர் உயிர் நீத்தமையால் அவர்கள் நினைவாக நடப்பட்டவை என்பதை கல்வெட்டுகளிலுள்ள செய்திகள் உறுதிசெய்கின்றன. இக்கல்வெட்டுகள் பதினொன்றாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டவை. அதாவது ராஜேந்திர சோழரின் 10, 17, 28, 29 ஆட்சியாண்டுகள் தொடங்கி முதலாம் குலோத்துங்கனின் எட்டாவது ஆட்சியாண்டு வரை வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பட்டுள்ளன.

மேலும் ராஜேந்திர சோழரின் பெயரோடு கங்கை கொண்ட சோழ செட்டி மும்முடி சோழ செட்டி என்று பெயர் சூட்டிக்கொண்டுள்ளதன் மூலம் வணிகர்களோடு கொண்டிருந்த தொடர்பை அறிய முடிகிறது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் இவ்வூர் சோழர் கால வணிகக்குழுவில் மிக முக்கிய பங்காற்றியிருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. சோழர் வரலாற்றில் இந்தக்கல்வெட்டுகள் முக்கிய இடம்பெறும் என்பதில் ஐயமில்லை. வரலாற்று முக்கியத்துவமிக்க இக்கல்வெட்டை பாதுகாக்க கொன்னைப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் செல்வமணி முழுமையான ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்துள்ளார். மேலும் முறைப்படுத்தி படியெடுக்கவும், தொடர் ஆய்வின் போதும் கொன்னைப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் தலைமையில் ஆசிரியர் ஞானமணி, ச.நாராயணன், பழனியப்பன், முத்துப்பாண்டி உள்ளிட்ட கிராம மக்கள் ஒத்துழைப்பு நல்கினர். இவ்வாறு முனைவர் மணிகண்டன் கூறினார்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு