மன்னார்குடி, டிச.4: நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கில் மாநிலம் முழுவது உள்ள நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் உறுதியளித்தது. இதையடுத்து தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், வருவாய்த்துறை ஆவணங்களின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகளின் விபரங்கள், அவற்றில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள விபரங்கள் ஆகியவற்றை கணக்கெடுப்பு செய்து, நீர்வளத்துறை வழங்கியுள்ள படிவங்களை பூர்த்தி செய்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளருக்கு இன்று அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டது.இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் நீர் நிலைகளின் விபரங்கள், அவற்றில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள விபரங்கள் ஆகியவற்றை கணக்கெடுப்பு செய்யும் பணிகள் நேற்று மும்மூரமாக நடந்தது.அதில் ஒருபகுதியாக வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி அறிவுறுத்தலின் பேரில் தாசில்தார் ஜீவானந் தம் தலைமையில் மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், மன்னார்குடி வட்டத்திற்குட்பட்ட மன்னார்குடி, கோட்டூர், உள்ளிக்கோட்டை, தலையாமங்கலம், பாலையூர் உள்ளிட்ட 5 பிர்காக்களை உள்ளடக்கிய 96 வருவாய் கிராமங்களை சேர்ந்த மண்டல துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் விஏஓக்கள் கலந்து கொண்டு தங்கள் கிராமங்களில் உள்ள நீர்நிலைகளின் விபரங்கள், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து படிவம் ஏ வில் பூர்த்தி செய்து கொடுத்தனர்.கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியர்கள் நாகராஜன், ரவி, வருவாய் ஆய்வாளர்கள் மாதவராஜ், லெனின், வளர்மதி, குணசீலன், சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.