அறந்தாங்கி, டிச.2: அறந்தாங்கி பகுதியில் நேற்று பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சமீபத்தில் வடகிழக்கு பருவமழை இப்பகுதியில் தீவிரமாக செய்தது. இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் முழுவதும் நிரம்பி உள்ளன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அறந்தாங்கி பகுதியில் ஒருசில இடங்களில் சிறிய தூறல் மட்டுமே இருந்தது. பல பகுதிகளில் பெரியளவில் மழை பெய்யாமல் வெயில் அடித்தது.
இந்நிலையில் நேற்று அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில நாட்களுக்குப் பிறகு மழை குறைந்ததால் நிம்மதியாக இருந்த பொதுமக்கள் நேற்று பெய்த மழையின் காரணமாக மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.