×

மண்டைக்காடு அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் மீது மயக்க பொடி தூவி 25 பவுன் நகை பறிப்பு : 3 பேருக்கு வலை

குளச்சல், டிச.2: மண்டைக்காடு அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் மீது மயக்க பொடி தூவி 25 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் மண்டைக்காடு  மணலிக்கரையை சேர்ந்தவர் பிரதீஷ்குமார் (29). வௌிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தற்போது ஊருக்கு வந்துள்ளார். இவரது மனைவி சிரிஜா சாமிலி  (27). நேற்று இவர்களது 2வது திருமண நாளாகும். இந்நிலையில் நேற்று காலை பிரதீஷ்குமார் தனது தாயை மருத்துவமனைக்கு அழைத்து  சென்றார். அப்போது சிரிஜாசாமிலி மட்டும் தனியாக வீட்டில் இருந்தார்.

அப்போது  2 ஆண், ஒரு பெண் என 3 பேர் வந்து பிச்சை கேட்டுள்ளனர். வீட்டிற்குள் இருந்த  சிரிஜா சாமிலி அவர்களை பின்னர் வருமாறு கூறியுள்ளார். ஆனால் அவர்கள் செல்லாமல்  அங்கேயே நின்று பணம் கேட்டுள்ளனர். அப்போது உறவினர் ஒருவர் போன்  செய்துள்ளார். அவரிடம் 3 பேர் வீட்டின் முன் நிற்பதை கூறினார். அவர் கதவை  பூட்டிவிட்டு உள்ளேயே இருக்க கூறியுள்ளார். அப்போது, தர்மம் கேட்டு  வந்தவர்கள் கதவை உடைப்பதுபோல் தட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன அவர்  வீட்டின் பின்பக்க கதவை திறந்து வெளியே செல்ல முயன்றுள்ளார். அப்போது  அவர்கள் பின்பக்கமாக வந்து அவரை துரத்தி சென்று அவர் மீது ஒரு பொடியை தூவி  உள்ளனர்.

இதில் அவர் மயக்க நிலைக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் நெற்றியில் மை இட்டுள்ளனர். அதன்பின்  அவர்கள் கேட்டதுபோல் நகைகள் அனைத்தையும் கழற்றி கொடுத்துள்ளார். அதுபோல்  வீட்டிற்குள் சென்று பீரோவில் இருந்த நகைகள் உட்பட மொத்தம் 25 பவுன்  நகைகளை கொடுத்துள்ளார். அதன்பின் அந்த 3 பேரும் பின்பக்க கதவு வழியாக  சென்றுவிட்டனர்.
இதற்கிடையே உறவினர் அங்கு வந்து சேர்ந்தார்.  முன்கதவு பூட்டப்பட்டிருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு சிரிஜா சாமிலி மயங்கி கிடந்தார்.

அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் டிஎஸ்பி தங்கராமன், இரணியல் பயிற்சி டிஎஸ்பி செங்கோட்டு வேலவன், மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும்  போலீசார் சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய் சம்பவ இடம் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இளம்பெண்ணின் திருமண நாளன்று நகைகள் திருடப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Mandakkadu ,
× RELATED கருவறையில் ஓட்டுக்கூரை சேதமடைந்தது...