கிருஷ்ணகிரி, டிச.2: கிருஷ்ணகிரி அருகே சுண்டம்பட்டி புதுவை நகரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 51ம் ஆண்டு தேர் திருவிழா, கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் நவநாள் ஜெபங்களுடன், சிறப்பு திருப்பலி நடந்தது. விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம், திருத்தேர் பவனி விமரிசையாக நடந்தது. முன்னதாக, தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில், சிறப்பு திருப்பலி, சிறுவர், சிறுமிகளுக்கு புது நன்மை மற்றும் உறுதிபூசுதல் நடந்தது. பின்னர், வாண வேடிக்கையுடன் புனித அந்தோணியாரின் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனியை, அந்தோணிதாஸ் புனிதநீர் தெளித்து, மந்திரித்து துவக்கி வைத்தார். வழக்கமாக சுண்டம்பட்டி, கந்திகுப்பம், புதுவை நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக பவனி வரும் தேர், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஆலய வளாகத்தில் மட்டுமே நடந்தது. பவனி வந்த தேர் மீது, பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை தூவி நேர்த்திக் கடனை செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜார்ஜ் செய்திருந்தார்.