தொண்டி,டிச.1: தொண்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எக்ஸ்ரே எடுக்க கருவி இல்லாததால், நோயாளிகள் கடும் சிரமப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி வளர்ந்து வரும் நகரமாகும். தொண்டியை மையமாக வைத்து 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையமே தொண்டி மற்றும் சுற்றுவட்டார மக்களின் பிணி தீர்க்கும் இடமாக உள்ளது. ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் பெரும்பாலானோர் இந்த மருத்துவமனையையே நாடி வருகின்றனர்.
மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் நடக்கும் விபத்துகளுக்கு முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
ஆனால் இம் மருத்துவமனையில் கடந்த சில வருடங்களாக எக்ஸ்ரே எடுக்க கருவி இல்லாமல் ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நோயாளிகள் செல்கின்றனர். இது கடும் சிரமத்தை ஏற்படுத்துவதால் மாவட்ட நிர்வாகம் மீண்டும் எக்ஸ்ரே கருவி வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமுமுக மாவட்ட செயலாளர் ஜிப்ரி கூறியது, தினமும் இம்மருத்துவமனைக்கு உள் மற்றும் புற நோயாளிகள் அதிகம் வருகின்றனர். பெரும்பாலும் ஏழை மக்களே வருவதாலும் விபத்து உள்ளிட்டவைகளில் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கும் எக்ஸ்ரே இல்லாததால் பெரும் சிரமம் ஏற்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து எக்ஸ்ரே கருவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.