×

பேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை


சேதுபாவாசத்திரம், ஏப்.23: தென்னையை தாக்கும் தஞ்சை வாடல்நோய் மற்றும் குறுத்தழுகல் நோயை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) சங்கவி விளக்கம்அளித்துள்ளார். சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பொறுப்பு சங்கவி தெரிவித்துள்ளதாவது: தென்னையை தாக்கும் நோய்களில் தஞ்சை வாடல்நோய் மற்றும் குறுத்தழுகல் நோய் மிக முக்கியமானதாகும். தஞ்சை வாடல்நோயானது தென்னையின் தண்டுப்பகுதியின் அடிப்பாகத்தில் பழுப்பும், சிவப்பும் கலந்த சாறு வடியும். இதனால் மரத்தின் அடிமட்டைகள் பழுப்பு நிறம் அடைந்து காய்ந்து தொங்கும். பிறகு நாளடைவில் மரத்தின் மட்டைகள் கீழே விழுந்து மரம் மொட்டையாக மாறும்.

வறட்சி காலத்தில் அடிக்கடி தண்ணீர் பாய்ச்சவேண்டும். நோய் தாக்கிய மரம் ஒன்றிற்கு பரிந்துரைக்கப்படும் ரசாயன உரங்களுடன் 50 கிலோ தொழுஉரம் மற்றும் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து இடவேண்டும். வாழையை ஊடுபயிராக சாகுபடி செய்வதன் மூலம் இந்நோயின் தாக்குதலை குறைக்க முடியும். டிரைக்கோடெர்மா ஹார்சியானம் என்ற உயிர் பூசானத்தை 50 கிலோ மக்கிய தொழு எருவுடன் கலந்து மரத்தை சுற்றி 3 அடி தூரத்தில் வைத்து இந்நோயை கட்டுப்படுத்தலாம். பாஸ்போபாக்டீரியா என்ற நுண்ணுயிர் 200 கிராமுடன் (1 பாக்கெட்) 10 கிலோ தொழுஉரம் கலந்து இடுவதன்மூலம் இந்நோயின் பாதிப்பை குறைக்கலாம். வேரூட்டம் செய்ய பென்சில் அளவு தடிமன் உள்ள புதிய இளஞ்சிவப்பு வேரினை கூரிய கத்தியால் சாய்வாக வெட்டி மேற்படி கரைசலில் உள்ள பாலிதீன் பையில் நுழைத்து கட்டி வைக்கவேண்டும். குருத்தழுகல் நோயை பொறுத்தமட்டில் தென்னங்கன்றுகளிலும் இளம் மரங்களில் மட்டுமே காணப்படும். குருத்தின் பச்சைநிறம் மாறி மஞ்சளாகி பின்னர் அழுகி வாடிவிடும். இதனை கட்டுப்படுத்திட ஒரு கிலோ மயில்துத்தம் மற்றும் 1 கிலோ சுண்ணாம்பு தூளை தனித்தனியே 5 லிட்டர் நீரில் கரைத்து போர்டோ பசையை தயாரிக்கவேண்டும். பாதிக்கப்பட்ட குருத்து பகுதியில் இந்த பசையை தடவி மழைநீர் படாதவாறு பார்த்துக்கொண்டால் இந்நோய் எளிதில் கட்டுப்படும்.

Tags :
× RELATED விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன்,...