×

கடமலை-மயிலை ஒன்றியத்தில் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை

வருசநாடு, ஏப். 20:கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கண்டமனூர் புதுக்குளம் கண்மாய், செங்குளம் கண்மாய், கெங்கன்குளம், கோவிலாங்குளம், சிறுகுளம் கண்மாய், கடமான்குளம் கண்மாய், பெரியகுளம் கண்மாய், சாந்தனேரி கண்மாய் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட கண்மாய்கள் பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த கண்மாய்களில் தனி நபர்கள் ஆக்கிரமித்து தென்னை, கொட்டை முந்திரி ,இலவமரம் உள்ளிட்ட விவசாயம் செய்கின்றனர். இந்த கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என புலம்புகின்றனர்.

இது குறித்து கண்டமனூர் சமூக ஆர்வலர் அங்குசாமி கூறுகையில், ‘கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஒரு சில கண்மாய்கள் மட்டும் அரசு ஆக்கிரமிப்பை அகற்றி உள்ளது. மீதமுள்ள கண்மாய்களை விரைவில் அகற்றி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். இதற்கு தேனி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். மேலும் பொதுமக்கள் கூறுகையில், ‘கடமலை-மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கண்மாய்கள் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதை அகற்றி கண்மாய்களை தூர்வாரி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். இதற்கு தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Katamalai-Mayilai Union ,
× RELATED பொதுமக்கள் மகிழ்ச்சி கடமலை-மயிலை...