பெரம்பலூர்,ஏப்.19: கொரோனா தொற்று ஊரடங்கு நாளை (20ம் ேததி) முதல் அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி பூங்காவை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா களைகட்டியது. 2020ம் ஆண்டு உலகையே அச்சுறுத்தி பரவிய கொரோனா வைரஸ் தொற்று பரவல் 2வது அலையாக அதிவேகமாக பரவி வருகிறது. இதனையொட்டி ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவில் படிப்படியாக ஓராண்டில் தளர்த்தப்பட்டது. சில கெடுபிடிகளை மீண்டும் தமிழக அரசு நாளை (20ம் தேதி) முதல் அமலுக்கு கொண்டு வருவதாக நேற்று (18ம்தேதி) மாலை அறிவித்துள்ளது.
இதன்படி அனைத்து சுற்றுலா தலங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல 20ம் தேதி முதல் அனைத்து நாட்களிலும் தடைவிதிக்கப்படுகிறது. பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், சிறுவர் அறிவியல் பூங்காக்கள் அனைத்தும் 20ம்தேதி முதல் மறுதேதி அறிவிக்கப்படும் வரை மூடப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று 18ம் தேதி வழக்கத்தைவிட மிக அதிகமாக பெரம்பலூர் நகர பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக குழந்தைளுடன் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் உள்ள சிறுவர் அறிவியல் பூங்காவிற்கு திரண்டு வந்திருந்தனர். அங்கு ஆசை தீர ஊஞ்சலில் ஆடி மகிழ்ந்து தாங்கள் கொண்டு வந்த சிற்றுண்டிகளை அருந்தி மகிழ்ந்தனர்.
அப்போது 20ம் தேதி முதல் சிறுவர் பூங்கா மூடப்படும் என வெளியான அறிவிப்புகள் வாட்ஸ்அப் மூலம் பரவியதால் அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். இன்று (19ம் தேதி) மாலையோடு பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா மூடப்படவுள்ள நிலையில் பெரம்பலூர் நகரில் வேறு எந்த பொழுதுபோக்கு வசதியும் இல்லாத நிலையில் இருந்த ஒன்றும் இன்றோடு மூடப்படுவது நகரவாசிகளுக்கு பெரும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.