×

நாகையில் பதநீர் விற்பனை அமோகம்

நாகை, ஏப்.19: தமிழகத்தின் பானம் எனக்கூறப்படும் பதநீர் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே கிடைக்கும். தற்போது பதநீர் சீசன் தொடங்கியுள்ளதால் நாகையில் வேளாங்கண்ணி, தெற்குபெய்கைநல்லூர், பரவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பனைமரங்களில் இருந்து அரசு அனுமதியுடன் பதநீர் இறக்குவதற்காக வெளியூர்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முதலில் பனைகளின் பாளைகளை சீவி நுனியில் வடியும் நீரை சுண்ணாம்பு தடவிய பானைகள் மூலம் சேகரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். இவ்வாறு சேகரித்ததே இனிப்புடன் கூடிய பதநீர் ஆகும்.

கோடை வெயிலின் தாகத்தை தணிக்க பல வகையான குளிர்பானங்கள் இருந்தாலும் பதநீர் போன்ற பானம் மிகவும் சிறந்தது. கோடை காலத்தில் ஏற்படும் நீர்கடுப்பை நீக்கும் சிறந்த பானம் இது. ஒரு லிட்டர் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. நாகைக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி பதநீர் வாங்கி பருகி செல்கின்றனர். சிலர் தங்களது வீடுகளுக்கும் வாங்கி செல்கின்றனர்.

Tags : Nagai ,
× RELATED குடிசை வீடுகளில் தீ – பாஜகவினர் மீது வழக்கு பதிவு