×

சிங்கப்பூர் சரக்கு கப்பல் உரிமையாளரிடம் இருந்து ₹100 கோடி நஷ்டஈடு பெற வேண்டும் மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை

நாகர்கோவில், ஏப்.19:  இந்திய மீனவர்கள் உயிரிழப்புக்கு காரணமான சிங்கப்பூர் சரக்கு கப்பல்  உரிமையாளரிடம் இருந்து ₹100 கோடி நஷ்ட ஈடுபெற்று உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) சார்பில் அதன் தலைவர் ஜி.செலஸ்டின், பொது செயலாளர் எஸ்.அந்தோணி ஆகியோர், பிரதமர் மோடிக்கு அனுப்பிய உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது : கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகு மீது சிங்கப்பூர் சரக்கு கப்பல் மோதி விபத்து ஏற்பட்டு 6 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இரண்டு மீனவர்கள் உயிரோடு மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 6 மீனவர்களை தேடி வருகிறார்கள். மாயமாகி உள்ள மீனவர்களின் கதி கேள்விக்குறியாகி உள்ளது. இவர்களை தேவையான அளவிற்கு நவீன உத்திகளை கடைபிடித்து இந்திய கடற்படை மூலமாக போர்க்கால பணிகள் மேற்கொள்வது போல் நடவடிக்கை எடுத்து மீட்க வேண்டியது அரசின் கடமையாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலி கப்பல் பாதுகாப்பு படையினரால் சுடப்பட்டு இறந்த மீனவர்களுக்கும் அதில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் உரிய நஷ்ட ஈடு கிடைக்காத சூழ்நிலையில், தற்போது சிங்கப்பூர் சரக்கு கப்பல் மோதி நம் இந்திய மீனவர்கள் பலியாகி உள்ளனர். இந்த விவகாரத்தில் கர்நாடக அரசும் மத்திய அரசும் வழக்குப் பதிவு செய்து உரிய முறையில் புலன் விசாரணையை விரைவாக நடத்திட வேண்டும். உயிரிழந்த மீனவரின் குடும்பங்களுக்கும், மாயமான மீனவர்கள் குடும்பங்களுக்கும், உயிரோடு காப்பாற்றப்பட்டு  சிகிச்சையில் இருந்து வரும் மீனவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாக்கும் வகையில் சம்பந்தப்பட்ட மத்திய மாநில அரசுகள் இடைக்கால நிவாரணம் அளிப்பது அரசின் கடமையாகும்

உயிரிழந்த மீனவர்கள், மாயமான மீனவர்கள், சிகிச்சையில் இருந்து வரும் மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கும், முழுமையாக சேதம் அடைந்த விசைப்படகு உரிமையாளருக்கும் இழப்பீடாக சிங்கப்பூர் சரக்கு கப்பல் உரிமையாளரிடம் இருந்து ₹100 கோடி பெற்று உரியவர்களுக்கு வழங்கிட வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களை சார்ந்த  ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது இது போன்ற நிகழ்வுகள் நடக்காவண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும். இவ்வாறு கூறி உள்ளனர்.

Tags : Federation of Fisheries Trade Unions ,Singapore ,
× RELATED சிங்கப்பூரில் இருந்து...