மதுரை, ஏப். 18: மதுரை மாநகராட்சியில் உள்ள 18வது வார்டு பைபாஸ் ரோட்டில், தனியார் காம்ப்ளக்ஸ் பகுதியில், குழாய் உடைந்து, கடந்த சில நாட்களாக குடிநீர் வீணாகி சாலையில் ஆறு போல ஓடுகிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து விட்டோம். ஆனால், நடவடிக்கை இல்லை. குழாய் சேதமடைந்து, குடிநீர் ரோட்டில் ஆறாக ஓடி வீணாகி வருவது வேதனையளிக்கிறது. இந்த சாலை வழியாகத்தான் மாநகராட்சி அதிகாரிகள் பலரும் சென்று திரும்புகின்றனர். ஆனால், அவர்களில் ஒருவரும் இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்த குழாயை சீரமைத்து, குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்’’ என்றனர்.