×

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வெளிநபர்களை அனுமதிக்க கூடாது சோழவந்தான் திமுக வேட்பாளர் கலெக்டரிடம் வலியுறுத்தல்


மதுரை, ஏப். 18: வாக்கு எண்ணிக்கை மையத்தில் வெளிநபர்களை அனுமதிக்கக் கூடாது என மதுரையில் கலெக்டர் அன்பழகனிடம், சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடேசன் வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கீழக்குயில்குடி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஆன்லைன் வகுப்பிற்கு செல்வதாகக்கூறி 20க்கும் மேற்பட்டோர் லேப்டாப்புடன் தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் முகவர்களுக்கும் தகவல் அளிக்காமல் உள்ளே சென்றனர். இவர்களுக்கு யார் அனுமதி அளித்தது. இது, வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்குகிறது. தேர்தல் ஆணைய பொறுப்பில் பல்கலைக்கழக கட்டிடம் வந்த பிறகு, அங்கு தேர்தல் பணிக்கு தொடர்பில்லாத எவரையும் அனுமதிக்கக்கூடாது. எனவே, வாக்கு எண்ணிக்கை முடியும்வரை இந்த வளாகத்திற்குள் யாரையும் அனுமதிக்காமல் இருப்பதுடன், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Cholavan ,DMK ,Collector ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி