பழநி, ஏப். 17: தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக வீசி வருகிறது. நாள்தோறும் தமிழகத்தில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது. இதன்படி திருமண நிகழ்ச்சி, கோயில் விழாக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விழாக்கள், சுபநிகழ்ச்சிகளை நம்பி உள்ள இசை, நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.திரையரங்குகள், உணவு விடுதிகள் போன்றவை கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டதுபோல், திருவிழா, மேடை கச்சேரி போன்றவற்றிற்கும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்க வேண்டும். இசை, நாடக கலைஞர்களுக்கு நிவாரணமாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் பழநியில் கவன ஈர்ப்பு பேரணி நடந்தது. பஸ்நிலையத்தில் துவங்கிய பேரணி சப்.கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. சிவன், பார்வதி, விஜயகாந்த் வேடமணிந்தும், கரகாட்டம், சிலம்பாட்டம் ஆடியும் மற்றும் தப்பாட்டம், பேண்டு வாத்தியம் வாசித்தபடியும் நகர்பகுதியில் ஏராளமான கலைஞர்கள் ஊர்வமாக சென்றனர்.