×

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தில் 50% தள்ளுபடியில் புத்தகம் விற்பனை

தஞ்சை, ஏப்.16: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் 50 சதவீத தள்ளுபடியில் புத்தக விற்பனை நேற்று துவங்கியது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஆண்டுதோறும் தமிழ்புத்தாண்டு மற்றும் பல்கலைக் கழக துவக்க நாளான செப்.15ம் தேதிகளில் புத்தக சிறப்பு விற்பனை நடத்துவது வழக்கம். அதன்படி கடந்தாண்டு செப்.15 ம் தேதி துவங்கிய புத்தக விற்பனையில் ரூ.19.20 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை நடைபெற்றது.இதையடுத்து தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று பல்கலைக் கழக வளாகத்தில் 50 சதவீத தள்ளுபடியில் சிறப்பு விற்பனை கண்காட்சியை துணைவேந்தர் பாலசுப்பிரமணியன், பல்கலைக் கழக பதிப்பு துறையின் முன்னாள் இயக்குநர் ராமநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர். பதிவாளர் சின்னப்பன், பதிப்பக துணை இயக்குநர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: தமிழின் பன்முகக் கூறுகளை ஆழமாக ஆராய்வதும், ஆவணப் படுத்துவதும், பதிவு செய்வதும் என பல நிலைகளில் தமிழ்மொழி, கலை, பண்பாடு, அறிவியல் தளங்களை தமிழ் மக்களிடையே எடுத்துச் செல்வதில் தமிழ்ப் பல்கலைக் கழகம் முனைப்போடு செய்லபடுகிறது. இப்பல்கலைக் கழக பேராசிரியர்கள் மட்டுமின்றி தமிழ் உலகின் தலைசிறந்த ஆய்வறிஞர்களின் படைப்புகள், பழந்தமிழ் இலக்கியங்கள், அகராதி மற்றும் களஞ்சியங்கள் எனப் பலவகை நூல்களையும் ஆழமாகப் பதிவு செய்து அவற்றை நூலாக வெளியிடுகிறது. பொதுமக்கள் மலிவு விலையில் அரிய நூல்களை வாங்கிப் பயன் பெறும் வகையில் ஆண்டுக்கு இரண்டு முறை சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. தமிழக அரசின் ரூ.2 கோடி நிதி உதவியோடு, மறு அச்சு திட்டத்தின் கீழ் 20 நூல்கள் மறு அச்சாக அச்சிட்டப்பட்டு தற்போது சிறப்பு விற்பனையில் உள்ளது. மேலும் 16 புதிய நூல்கள் அச்சிடும் பணி நிறைவுறும் தருவாயில் உள்ளது. தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு விற்பனை வரும் மே 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கொரோனா ஊரடங்கு காலமாக இருப்பதால், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்கான விவரங்கள் பல்கலைக் கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

Tags : Tanjore Tamil University ,New ,
× RELATED தேனி புதிய பஸ்நிலையம் அருகே பை-பாஸ்...