திண்டுக்கல், ஏப். 16: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இதில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2வது அலை அதிகரித்து வரும் நிலையில் ஏப்.10ம் தேதி முதல் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் அபிராமி அம்மன் கோயிலில் திருவிழா, அரசு விதிமுறைகள்படி பக்தர்கள் இன்றி நடத்தலாம் என கலெக்டர் விஜயலட்சுமி அனுமதி வழங்கினார். அதன்படி நேற்று காலை 5 மணிக்கு கோயில் குருக்கள் கொடியேற்றினார். கோயில் ஆகமவிதிபடி அனைத்து பூஜைகளும் பக்தர்களின்றி நடந்தது. பத்தாம் நாள் திருவிழாவான திருக்கல்யாணம் ஏப்.24ம் தேதி நடைபெறும். தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாலை நேரங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு உட்பிரகாரத்தில் வீதியுலா வருவார். இதிலும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. மற்ற நேரங்களில் வழக்கம் போல் பக்தர்கள் கோயிலுக்கு வரலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.