×

நாகர்கோவிலில் பட்டப்பகலில் நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி தீ குளித்த தொழிலாளி

நாகர்கோவில், ஏப். 16:  நாகர்கோவிலில் நேற்று காலை நடுரோட்டில் தொழிலாளி ஒருவர் தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  நாகர்கோவில் வேப்பமூடு அருகே நேற்று காலை வாலிபர் ஒருவர் கையில் பெட்ரோல் கேனுடன் அண்ணா பஸ் நிலையம் நோக்கி நடந்து சென்றார். யாரும் எதிர்பாராத நிலையில் அவர் நடுரோட்டில் நின்றுக்கொண்டு தனக்குதானே பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடலில் பரவிய தீயின் வேதனை தாங்கமுடியாமல் நடுரோட்டில் வாலிபர் அங்கும், இங்குமாக ஓடினர். பின்னர் சாலையில் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். உயிருக்கு போராடிய வாலிபரை ஆம்புலன்சில் ஏற்றி ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 இது குறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தீ குளித்தவர் நாகர்கோவில் அருகே உள்ள வடக்குசூரங்குடியை சேர்ந்த செய்யது முகமது மகன் ஷேக் அலி என்பது தெரியவந்தது. அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தகராறு செய்துகொண்டு  வெளியேறியுள்ளார். பின்னர் அண்ணா பஸ்நிலையம் மற்றும் சாலையோரம் தங்கி, கிடைக்கும் வேலையை செய்து நாட்களை கடத்தி வந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்யும் நோக்கில் தீ குளித்து இருப்பது தெரியவந்தது.  கோட்டார் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நாகர்கோவிலில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Nagercoil ,
× RELATED நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை