திருவண்ணாமலை, ஏப்.15: திருவண்ணாமலையில் கொரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கையாக, அறிவியல் பூங்கா காலவரையின்றி மூடப்பட்டது. திருவண்ணாமலையில் கொரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே, தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தல், சமூக இடைவெளியை கடைபிடிக்காத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆனாலும், நாளொன்றுக்கு சராசரியாக 50க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பொது இடங்களில் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள அறிவியல் பூங்கா, அண்ணா நுழைவு வாயில் அருகே உள்ள நவிரம் பூங்கா ஆகியவை, காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், பெரியவர்களுக்கான நடைபயிற்சி பாதை, அறிவியல் விந்தைகளை எளிமையாக அறிந்துகொள்ளும் செயல்விளக்க வசதிகள் கொண்ட அறிவியல் பூங்கா மீண்டும் மூடப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.