×

நெய்வேலியில் மூதாட்டியிடம் 8 பவுன் செயின் பறித்து சென்ற வாலிபர் கைது மேலும் ஒருவருக்கு வலை

நெய்வேலி, ஏப். 15: நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-5ல் வசித்து வருபவர் ஜான்பால் ராஜ். இவரது தாயார் சவுரி அம்மாள்(70). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வட்டம்-10ல்  ராமலிங்க அடிகளார் கோயில் அருகே நடந்து சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் சவுரி அம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர்.  இது குறித்த புகாரின்பேரில், நெய்வேலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ் உத்தரவின்பேரில் நெய்வேலி டிஎஸ்பி கங்காதரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது தலைமையில் டெல்டா போலீஸ் உதவி ஆய்வாளர் நடராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வடக்குத்து நெய்வேலி பிளாசா அருகே தள்ளுவண்டி கடை நடத்தி வரும் ரஜினிகாந்த் என்பவரது கடைக்கு சென்ற வட்டம்-21 பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அகிலன்(23) என்பவர், கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 பறித்து சென்றார். இது குறித்த புகாரின்பேரில் நெய்வேலி போலீசார் வழக்கு பதிந்து அகிலனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில், கடந்த சில நாட்களுக்கு முன், முதாட்டியிடம் 8 பவுன் செயின் பறித்து சென்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரிடமிருந்து தங்க செயினை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைந்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Bown Chain ,Neyvali ,
× RELATED நெய்வேலியில் பயங்கரம்: மனைவியின் இரு...