×

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு வியாபாரிகள், மக்கள் ஒத்துழைக்க வேண்டும் கோவில்பட்டி நகராட்சி ஆணையர் வேண்டுகோள்

கோவில்பட்டி, ஏப். 15:  கொரோனா 2ம் அலை பரவலை தடுக்க கோவில்பட்டி நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆணையாளர் ராஜாராம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் ராஜாராம் கூறுகையில், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிவதுடன் கடைகளிலும், பொது இடங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப் போட்டு கொண்டு கழுவ வேண்டும். பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

திருவிழாக்கள் திருமணம் மற்றும் கூட்டம் அதிகமாக உள்ள நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும். காய்ச்சல் தலைவலி, வயிற்று போக்கு, தொண்டை வலி தொடர்ந்து இருநாட்களுக்கு மேல் அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக நகராட்சிக்கு தகவல் தெரிவித்து விட்டு அருகே உள்ள அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். 45 வயதிற்கு மேற்பட்டோர், ஊரணித்தெரு மற்றும் ஸ்ரீராம் நகரில் உள்ள நகர்நல மையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசியை இலவசமாக போட்டு பயனடைய வேண்டும்.

அரசுத்துறை அலுவலர்கள் மேற்கொள்ளும் ஆய்வில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் வசூலிக்கப்படும். சமூக இடைவெளி கடைபிடிக்காத கடைகளுக்கு ரூ.500ம், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், காவல்துறை மூலமும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, கொரோனா 2ம் அலை பரவலை தடுக்க கோவில்பட்டி நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Kovilpatti Municipal ,Commissioner ,
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...