×

விசைப்படகு மீது கப்பல் மோதி கடலில் மூழ்கி பலியானவர்களில் 2 பேர் குமரியை சேர்ந்த மாமன், மருமகன்

குளச்சல், ஏப்.15:  நடுக்கடலில் விசைப்படகு மீது வெளிநாட்டு கப்பல் மோதி கடலில் மூழ்கிய மீனவர்களில் குமரியை சேர்ந்த 2 பேர் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேரை தேடி வருகிறார்கள். குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த மீனவர்கள் கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பேப்பூரில் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். கடந்த 11ம் தேதி இரவு ஜாபர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 14 மீனவர்கள் கடலுக்கு தொழிலுக்கு சென்றனர். இந்த படகில் குமரி மாவட்டம் குளச்சல், ஒடிசா, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் இருந்தனர். கடந்த 12ம் தேதி இரவு மங்களூருவில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டு இருந்தபோது, அவ்வழியாக சென்ற வெளிநாட்டு சரக்கு கப்பல் விசைப்படகு மீது மோதியது. இதில் விசைப்படகு கவிழ்ந்து மீனவர்கள் அனைவரும் கடலில் மூழ்கினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மங்களூரு கடலோர பாதுகாப்பு படையும், கடலோர பாதுகாப்பு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதில் குளச்சலை சேர்ந்த வேல்முருகன், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சுனில்தாஸ் ஆகியோர் மீட்கப்பட்டனர். இவர்கள் மங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களை பற்றிய அடையாளம் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் உயிரிழந்த 3 பேரில் 2 பேர் குமரி மாவட்டம் குளச்சல் துறைமுக தெருவை சேர்ந்த அலெக்சாண்டர் மற்றும் அவரது மாமனார் தாசன் என்பது தெரிய வந்துள்ளது.

மற்றொருவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த மீனவர் ஆவார். அவரது உடலும் மீட்கப்பட்டுள்ளன. இது குறித்து குமரி மாவட்டத்தில் உள்ள அலெக்சாண்டர் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாமனார், மருமகன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாயமான 9 பேரின் கதி என்ன? என்பது தெரிய வில்லை. இவர்களில் 4 பேர் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் ஆவர். 5 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மாயமான மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.

கேபினில் சிக்கிய உடல்கள்?
திருவனந்தபுரம்: படகு விபத்தில் காணாமல் போன 9 மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று படகு முற்றிலுமாக கடலில் மூழ்கியது. மீனவர்கள் சம்பவத்தன்று இரவு சாப்பிட்டு முடித்து தூங்கும்ேபாதுதான் இந்த விபத்து நடந்துள்ளது. அதனால் 9 மீனவர்கள் உடல்களும் கேபினில் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதற்கிடையே படகு கட்டுப்பாட்டை இழந்து கப்பல் செல்லும் பாதையில் ெசன்றதால் தான் விபத்து ஏற்பட்டுள்ளதாக மங்களூரு கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். சரக்கு கப்பல் மீது படகு மோதியதா, அல்லது படகு கப்பலில் மோதி கவிழ்ந்ததா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. படகில் மோதிய கப்பல் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

Tags : Kumari ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...