×

சித்திரை மாதம் இன்று பிறப்பு குமரி கோயில்கள், வீடுகளில் இன்று விஷூ கணி தரிசனம்

நாகர்கோவில், ஏப்.14: சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில், வீடுகளில் இன்று விஷூ கணி தரிசன நிகழ்ச்சி நடக்கிறது. சித்திரை பிறப்பை மலையாள மொழி பேசும் மக்கள் விஷூ பிறப்பு என்றும், அதனையொட்டி விஷூ ‘கணி’ காணுதலையும் மேற்கொள்கின்றனர். குமரி மாவட்டத்திலும் சித்திரை விஷூ கணி காணும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கோயில்களில் பழ வகைகள், காய்கறிகள் படைத்து வழிபாடு நடத்துவார்கள். வீடுகளிலும் பூஜை அறைகளில் காய், கனிகளை படைத்து வழிபடுவர். வீடுகளில் வெண்கலத்தால் ஆன உருளி பாத்திரத்தில் அல்லது அகன்ற வெண்கல தட்டில் அரிசியும், நெல்லும் உபயோகித்து பாதி நிரப்பி அதன் மீது ஜரிகையுடன் கூடிய புதிய வேஷ்டி, தங்க நகை, முகம் பார்க்கும் கண்ணாடி, கணி வெள்ளரி (மஞ்சள் நிறத்தில் உள்ளது), கணிக்கொன்றை பூக்கள், பழுத்த பாக்கு, வெற்றிலை, குங்குமம், எலுமிச்சைப்பழம், உடைத்த தேங்காய் ஆகியவற்றை வைத்து கணி தயார் செய்து, இன்று அதிகாலையில் எழுந்ததும், அதை இருகரம் கூப்பி வணங்குவார்கள்.

இவ்வாறு செய்வதால், இந்த ஆண்டு முழுவதும் வீட்டில் ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கும். நாட்டின் மழை வளம், மண் வளம் செழிக்கும் என்பது நம்பிக்கை ஆகும். பின்னர் வீட்டில் உள்ள பெரியவர்கள் காலில் விழுந்து வணங்கி, கை நீட்டம் பெற்று ஆசி வாங்குவார்கள். பின்னர் புத்தாடை அணிந்து கோயில்களுக்கு சென்று வழிபடுவார்கள். சித்திரை விஷூவையொட்டி குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நாகராஜா கோயில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில், நடுகாட்டு இசக்கியம்மன் கோயில், முப்பந்தல் இசக்கியம்மன் கோயில், கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசுவாமி கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், குமாரகோவில் முருகன் கோயில், வெள்ளிமலை முருகன் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அதிகாலையிலேயே கோயிலுக்கு வருகின்ற பக்தர்கள் பழங்கள், காய்கறிகள் படைத்து வழிபடுவர். கை நீட்டமும் பக்தர்களுக்கு வழங்கப்படும். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோயில்களில் பக்தர்கள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சித்திரை பிறப்பையொட்டி மார்க்கெட்டுகளில் பழங்கள் மற்றும் பூக்கள் விற்பனை நேற்று காலை முதல் சூடுபிடித்தது. நாகர்கோவில் வடசேரி காய்கறி சந்தை, அப்டா மார்க்கெட் மற்றும் நாகர்கோவில் நகரில் பல்வேறு இடங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளிலும் பழங்கள் விற்பனைக்காக குவித்து வைத்திருந்தனர். இதே போல் மாவட்டம் முழுவதும் பிற இடங்களிலும் பழங்கள், பூக்கள் விற்பனை இருந்தது. நாகர்கோவில் பகுதி மார்க்கெட்களில் ஆப்பிள் கிலோ ரூ.190க்கும், மாதுளை கிலோ ரூ.230க்கும், மாம்பழம் கிலோ ரூ.140க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஆரஞ்ச் கிலோ ரூ.100க்கும், பைனாப்பிள் கிலோ ரூ.60க்கும். திராட்சை கிலோ ரூ.35க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Tags : Chittirai Kumari ,Vishu Kani Darshan ,
× RELATED சபரிமலையில் இன்று விஷூ கணி தரிசனம்